'காவி பயங்கரவாதம்': சிதம்பரம் பேச்சுக்கு பாஜக-சிவசேனா கடும் கண்டனம்: நாடாளுமன்றத்தில் அமளி
டெல்லி: 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு நாடாளுமன்றத்தில் நேற்றும் இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தப் பிரச்சனையால் ராஜ்சபாவி்ல் அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ப.சிதம்பரம், நாட்டில் காவி பயங்கரவாதமும் (saffron terror) வளர்ந்து வருவதாகவும், ஹைதராபாத், அஜ்மீர், கோவா, மலேகாவ்ன், மோதாசா (குஜராத்) ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பாஜக மற்றும் சிவசேனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
நேற்று இது குறித்து நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பிக்கள் பிரச்சனை கிளப்பினர். அவையின் மையப் பகுதிக்கு வந்து, சிதம்பரத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களோடு பாஜக எம்பிக்களும் இணைந்து சிதம்பரத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாஜக எம்பிக்கள் கர்நாடக எம்பியான அனந்தகுமார் தலைமையில் சிதம்பரத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது பேசிய பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி, காவி என்பது அமைதியின் அடையாளம். அதை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது. இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தக்க பதிலடி கிடைக்கும் என்றார்.
இந் நிலையில் காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். எனவே அது குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கோரிக்கை னார். அவருக்கு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு பாஜக எம்பிக்க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பிகார் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெறவே பாஸ்வான் இவ்வாறு மலிவான அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ராஜ்யசபாவில் பாஜக, சிவசேனா எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடிய போதும் அமளி தொடர்ந்தது. இதனால் பகல் 12 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் மும்பையில் நிருபர்களிடம் பேசிய சிவசேனா நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரே, காவி பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகக் கருத்துத் தெரிவித்த ப.சிதம்பரம் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும்.
தீவிரவாதத்தின் உண்மையான நிறத்தை புரிந்துகொள்ள முடியாமல் இதுபோன்ற கருத்துக்களை சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அஜ்மல் கசாபும், அப்சல் குருவும் யார்?. காஷ்மீரில் நடந்துவரும் வன்செயல்களை ப.சிதம்பரம் பார்க்கவில்லையா? என்றார்.












Click it and Unblock the Notifications