பருப்பு-சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்தது!
சென்னை: கிடுகிடுவென உயர்ந்து வந்த மளிகைப் பொருள்களின் விலை சற்றே குறையத் துவங்கியுள்ளது.
குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்த பருப்பு விலை உயர்வு ஒரு கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு 63 லிருந்து ரூ 58 ஆகக் குறைந்துள்ளது.
சர்க்கரை விலை ரூ 30லிருந்து 26-க்குக் குறைந்துள்ளது.
மகாராஷ்ட்ராவிலிருந்து அதிக அளவு புதிய பருப்பு வரத்து துவங்கியுள்ளதாலும், வட மாநிலங்களில் இந்த முறை கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை உற்பத்தி சிறப்பாக உள்ளதாலும் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பருப்பு, சர்க்கரை விலை மேலும் ரூ 5 முதல் 8 வரை குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த இரு பொருள்கள் தவிர, மேலும் சில மளிகைப் பொருள்களின் விலையிலும் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாசிப்பருப்பு கிலோவுக்கு முதல் ரகம் ரூ.88ல் இருந்து ரூ.78 ஆகவும், 2-ம் ரகம் ரூ.75ல் இருந்து ரூ.65 ஆகவும் குறைந்துள்ளது.
உளுந்தம் பருப்பு கிலோ ரூ.80ல் இருந்து ரூ.76 ஆகவும், 2-ம் ரகம் ரூ.70 இருந்து ரூ.65 ஆகவும் குறைந்துள்ளது.
மிளகாய் வத்தல் கிலோ ரூ.120ல் இருந்து ரூ.80 ஆக குறைந்து விட்டது. 2ம் ரகம் ரூ.100ல் இருந்து ரூ.60 ஆக குறைந்துள்ளது. நீள மிளகாய் வத்தல் ரூ.70ல் இருந்து ரூ.55 ஆகவும் குறைந்துள்ளது.
பாமாயில் கிலோ ரூ.52ல் இருந்து ரூ.47 ஆகவும், கடலை எண்ணை விலை ரூ.85ல் இருந்து ரூ.79 ஆகவும் குறைந்துள்ளது.