இளங்கோவன் ஆதரவாளர்கள் 4 பேர் காங்கிரசிலிருந்து நீக்கம்!: தங்கபாலு அதிரடி
காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனுக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் மூலமாக அந்தக் கட்சியி்ன் தலைமை எச்சரி்க்கை விடுத்தது.
இதையடுத்து அவர் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகக் கூற ஆரம்பித்துள்ளார். அதே நேரத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் தனது வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அவர்கள், திமுக கூட்டணியை ஆதரிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
தங்கபாலு எந்த கட்சியை சார்ந்தவர் என்று கேட்டுள்ள இளங்கோவனி்ன் ஆதரவாளர்கள், அதற்கு அவர் விளக்கம் தராவிட்டால் போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம் என்றனர்.
இந் நிலையில் இளங்கோவனின் ஆதரவாளர்களை அடக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தங்கபாலு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கோவை மாவட்ட காங்கிரசைச் சேர்ந்த யுவராஜ், இருகூர் மனோகரன், சாரதா சண்முகம், மதிவாணன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியும், காங்கிரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அவர்களுடன் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் யாரும் கட்சிரீதியாக எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையின் ஒப்புதலோடு இந்த நடவடிக்கை அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.