ஆபாச படம் எடுத்து மிரட்டல்: டாக்டர் கணவர் மீது மனைவி புகார்
தஞ்சாவூர்: தனது கணவரே தன்னை ஆபாசப் படம் எடுத்து மிரட்டுவதாகவும், மேலும் பல பெண்களை அவர் ஆபாசப் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் டாக்டரின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சை பொன்நகரில் வசித்து வரும் அனுராதா (25) வழக்கறிஞருடன் வந்து மாவட்ட எஸ்பி செந்தில்வேலனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தாயார் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். என்னுடைய சித்தியின் கொடுமை தாங்காமல் எனக்கு 15 வயதிலேயே என் தந்தை திருமணம் செய்து வைத்தார்.
அந்த திருமணம் மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால், என் கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரணை செய்து அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும் எனது 2 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த போது திருச்சியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு படித்து வந்தார்.
ஒருநாள் வேலை விஷயமாக அவரை சந்தித்துப் பேசியபோது, குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன். மறுநாள் தான் எனக்கு சுயநினைவு வந்தது.
மயக்கநிலையில் இருந்த என்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் என்னை நிர்வாணமாகவும் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களை அவரது மொபைலில் மெமரிகார்டில் பதிவு செய்து வைத்துள்ளார். இதை வைத்து அடிக்கடி என்னை மிரட்டி என் வீட்டிற்கு வந்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் தடுக்க என்னை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டு, கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
நான் அவருடன் குடும்பம் நடத்தியபோது அவர் பல பெண்களின் ஆபாச படங்களை பதிவு செய்து வைத்துள்ளது தெரியவந்தது.
அவர் மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, அங்கு கருக்கலைப்பு செய்து கொள்ளும் சில பெண்களின் படங்களையும் அவர் எடுத்து வைத்துள்ளார். நான் இதுபற்றி கேட்டபோது, என்னையும், எனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அச்சமான சூழ்நிலையில் அவருடன் இருக்க பிடிக்காமல் விலகி வந்துவிட்டேன்.
இப்போதும் தொடர்ந்து என்னை அவர் மிரட்டி வருகிறார். போலீசில் புகார் கொடுத்தால் எனது ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.
எனவே எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே என் கணவரிடம் இருந்து எனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரிடம் உள்ள எனது ஆபாசப் படங்களை கைப்பற்றி அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications