ஷேர் ஆட்டோக்கள் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாப சாவு
மதுரை: மதுரை அருகே ஷேர் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், அவை இரண்டும் தீப்பிடித்துக் கொண்டன. இதில் அதில் பயணம் செய்த நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது நரியம்பட்டி. இவ்வூரை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (18). இவர் அதே ஊரை சேர்ந்த காசிமாயன் என்பவரின் ஷேர் ஆட்டோவில் டிரைவராக பணிபுரிந்தார்.
இந்த ஆட்டோ செக்கானூரணி-விக்கிரமங்கலம் இடையே ஷேர் ஆட்டோவாக இயக்கப்பட்டு வந்தது. நேற்று பாண்டியராஜன் தனது ஆட்டோவில் செக்கானூரணியில் இருந்து நரியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் விக்கிரமங்கலத்தில் இருந்து ராமன் என்பவர் மற்றொரு ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்தார். கண்ணனூர் விலக்கு அருகே வந்தபோது பாண்டியராஜன் ஆட்டோவும், ராமன் ஓட்டி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் ராமன் ஓட்டிவந்த ஆட்டோ மோதிய வேகத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் பாண்டியராஜன் ஓட்டிவந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் பாண்டியராஜன் மற்றும் பயணம் செய்த 3 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.
தகவல் கிடைத்ததும் திருமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து பிணங்களை மீட்டனர்.
பாண்டியராஜனுடன் உயிரிழந்த மற்ற மூவரும் யார் என்பது தெரியவில்லை. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications