புதுவையில் திமுக-காங். கூட்டணி சுமூகமாக உள்ளது: அமைச்சர் நாராயணசாமி
சென்னை: புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக உள்ளதாக கூறியுள்ளார் மத்திய அமைச்சரும், புதுவை காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி.
முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நாராயணசாமி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள அகழிகளை அகற்றுவதற்கும், அதனை செப்பனிடுவதற்கும், பஸ் நிலையம் மற்றும் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக நானும், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கமும் ஆய்வு செய்தோம்.
இந்த பணிகளுக்காக மத்திய அரசு ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. என்ன என்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துக் கூறினேன்.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கியுள்ளது. மேலும் அங்கு உள்ள தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிகொடுக்க உள்ளது. ரூ.1,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோல இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக பிரதமர் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதை எடுத்துக்கூறினேன்.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகவும், வலுவாகவும் உள்ளது. இந்த கூட்டணி வரும் காலத்திலும் தொடரும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா டெல்லி மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது, சில கட்சிகள் உள்ஒதுக்கீடு வலியுறுத்துவதால் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். இதேபோல உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதாவும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications