பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவியும் சீனப் படைகள்-இந்தியா கவலை
காஷ்மீரின் கதை பெரும் சோக வரலாற்றைக் கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிவதற்கு முன்பு காஷ்மீரை ஆண்டு வந்தவர் இந்து ராஜாவான ஹரிசிங். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தபோது எங்கு போவது என்பது தெரியாமல் ஹரிசிங் குழம்பிக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் படையினர், அதிரடியாக காஷ்மீருக்குள் புகுந்தனர்.
இதையடுத்து இந்தியாவுடன் காஷ்மீர் சாம்ராஜ்யத்தை இணைப்பதாக அறிவித்தார் ஹரிசிங். அப்படி வந்து சேர்ந்த காஷ்மீர்தான் நம்மிடம் இப்போது இருப்பது. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதுதான் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக் கூறப்படும் கில்ஜிட், பல்திஸ்தான் ஆகியவை. இதற்கு ஆசாத் காஷ்மீர் என பெயர் வைத்துள்ளது.
இந்தப் பகுதியிலிருந்து ஒரு பகுதியை அது 1963ம் ஆண்டு சீனாவுக்கு தானமாக கொடுத்தது. இது போக சீனாவும் ஒரு பகுதி காஷ்மீரை ஆக்கிரமித்துக்கொண்டு அக்ஷய் சின் என பெயர் வைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இப்படி நம்மிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளை இதுவரை நம்மால் திரும்பப் பெற முடியவில்லை.
இந்த நிலையில் கில்ஜிட்-பல்திஸ்தான் பகுதிகளில் சீனப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இது இந்தியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் மக்கள் ராணுவத்தினர் கிட்டத்தட்ட 11,000 பேர் வரை கில்ஜிட் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வழியாக வளைகுடாக்களுக்குப் போவதற்கு வசதியாக இவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்தோம். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விசாரித்து வருகிறோம். ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால் மிகவும் கவலைக்குரியதாகும். நமது நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்றார்.