ராஜபக்சே 3வது முறையாக அதிபராவதற்கு வசதியாக சட்ட திருத்தம்
கொழும்பு: ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபராவதற்கு வசதியாக இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டின் சட்டப்படி ஒரு ஆள், 2 முறைதான் அதிபர் பதவியை வகிக்க முடியும். ஆனால் தற்போது ராஜபக்சேவை மூன்றாவது முறையாகவும் அதிபராக்குவதற்கு வசதியாக சட்டத்தை திருத்தி விட்டனர்.
அதன்படி,இலங்கை குடியுரிமை பெற்ற எந்த நபரும், எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் உட்கார்ந்து கொள்ளலாம். காலவரம்பே கிடையாது.
தற்போது ராஜபக்சே 2வது முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கிறார். ஆனால் இந்தப் பதவிக்காலம் சட்டப்படி வருகிற நவம்பர் மாதம்தான் தொடங்குகிறதாம். அன்று முதல் ஆறு ஆண்டுகளுக்கு அவர்தான் அதிபராக நீடிப்பார். அதன் பிறகு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை அவருக்கு இருந்தது. இதைத்தான் தற்போதைய திருத்தம் மூலம் நீக்கியுள்ளனர்.
ஈழத்தில் நடந்த போருக்குப் பிறகு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் வெற்றி பெற்றார். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரது கூட்டணியே வெற்றி பெற்றது.
ராஜபக்சேவுக்கு வசதியாக திருத்தப்பட்டுள்ள அரசியல் சட்ட திருத்தத்திற்கு ராஜபக்சே அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாம். இத்தகவலை அந்த நாட்டு அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா தெரிவித்துள்ளார்.
இந்த செயலை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக எதிர்த்து கண்டித்துள்ளது.
தற்போது ராஜபக்சே அதிபராக உள்ளார். அவரது மகன் நமல் எம்.பியாக இருக்கிறார். ஒரு தம்பியான கோத்தபயா பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கிறார். இன்னொரு தம்பியான பசில் ராஜபக்சே அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.