திருத்தணியில் இடிதாக்கி கோவில் கோபுரம் சேதம்: கனமழையால் மக்கள் அவதி
திருத்தணி: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் தும்பிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் கோபுரம் இடி விழுந்து சேதமடைந்தது.
திருத்தணியை அடுத்து உள்ளது தும்பிக்குளம் கிரமாம். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. அப்போது இடி தாக்கி அங்கிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் கோபுரம் சேதமடைந்தது. இந்த இடியால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதானது. மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் கிராமமே இருளில் மூழ்கியது. இடிதாக்கி ஒரு பசுமாடு இறந்தது.
திங்கள்கிழமை காலை கோவில் பூசாரி கோவிலைத் திறந்தபோது கோபுரத்தில் இருந்த பஞ்சலோக கலசம் கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. மேலும் கோவிலின் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி வருவாய் ஆய்வாளர் திவாகர், வி.ஏ.ஓ. சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, கோவில் நிர்வாகிகள் கோபி, ரமேஷ், மூர்த்தி, கொல்லாபுரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திருத்தணியில் பெய்த கன மழையால் அரக்கோணம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழைய தர்மராஜாகோவில் தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.
இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.