ஐபிஎல் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் விமானம் வாங்கிய லலித் மோடி
ஐபிஎல் அமைப்பில் நடந்த ஊழல்கள் எதிரொலியாக அதன் ஆணையர் பதவியிலருந்து தூக்கப்பட்டார் மோடி. அவர் மீது இந்திய கிரிக்கெட் ஆணையம் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. ஆனால் விசாரணைக்கு வராமல் டிமிக்கி அடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. தனது வக்கீலை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
தற்போது வெளிநாட்டில் போய் உட்கார்ந்து கொணடிருக்கும் மோடி, மும்பை தாதாக்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி வர மறுத்து வருகிறார். தற்போது மோடி மீது கிரிமினல் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப டிவி உரிமை வழங்கப்பட்டதில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் கிடைத்த பணத்தை வைத்து மோடி பெரிய விமானமே வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குழுமம்தான் இதற்கான டிவி உரிமையை வாங்கியது. 10 ஆண்டுகளுக்கான உரிமம் இது. இதில் ரூ. 425 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதில் ரூ. 80 கோடிக்கு மோடி விமானம் வாங்கியுள்ளாராம். வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
விரைவில் மோடி மீது பல்வேறு கிரிமனல் வழக்குகள் சரமாரியாக பாயும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மறுபடியும் கிரிக்கெட் ஊழல் சூடு பிடித்துள்ளது.