ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். அதோடு அமெரிக்கப் படையினரும் வரலாறு காணாத உயிர்ப் பலியை சந்தித்தனர்.
இருப்பினும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பிடிவாதம் காரணமாக அமெரிக்க படைகள் ஈராக்கிலேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே ஒபாமா அதிபரான பின்னர் ஈராக்கிலிருந்து முழுமையாக அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்படுவர் என அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த வாரம் ஈராக்கிலிருந்து அமெரிக்காவின் கடைசி தாக்குதல் படையும் வெளியேறியது. தற்போது ஈராக்கில் தாக்குதல்கள் முழுமையாக முடிந்து விட்டதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
போர் முடிந்த நிலையில் இனி ஈராக்கை காக்கும் பொறுப்பு அந்நாட்டு மக்களுடையது. ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று தேர்தலின்போது அமெரிக்க மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். ஈராக்கை பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தினர் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றார் ஒபாமா.
இருப்பினும் ஈராக்கில் தற்போது 50,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். மாறாக ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதேசமயம், அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஈராக்கை விட்டு வெளியேறுவார்கள்.
கடந்த ஏழரை ஆண்டுக கால அமெரிக்க படையெடுப்பின்போது, ஈராக்கில், 4400 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையெடுப்பு புஷ் அதிபராக இருந்தபோது நடந்தது. தற்போதைய அதிபரான ஒபாமாவிற்கு இதில் உடன்பாடில்லை. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications