முல்லைப் பெரியாறு அணையை எப்போது வேண்டுமானாலும் கேரளா உடைக்கும்-வைகோ
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பேராபத்தை உண்டாக்கி உள்ளது. கேரள அரசு பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கியுள்ளது. 700 மீட்டர் நீளத்தில் 7 அடி அகலத்தில் 54 அடி உயரத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது.
கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே தூக்கி வீசி விட்டு புதிய அணை கட்டுவதற்காக அனுமதியில்லாத இடத்தில் ராட்சத எந்திரங்களை கொண்டு வந்து ஏராளமான மரங்களை வெட்டி அணை கட்ட தொடங்கி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் சுமார் ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகம் இருப்பதால் அந்த பகுதியில் சிறிய கட்டிடம் கூட கட்டக் கூடாது என்று 1984-ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம், 1962-ம் ஆண்டு கேரள வன பாதுகாப்பு சட்டங்கள் கூறுகின்றன.
அந்த இடத்தில் தான் அய்யப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு முன்பு கேரள எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இதில் எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் கூறினார். அதே கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. புலிகள் காப்பகம் உள்ள அந்த பகுதியில் சிறிய தடுப்பு அணை கூட கட்டக் கூடாது என்று கூறிய மத்திய அரசு அனுமதியில்லாத இடத்தில் அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது.
முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. அணைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம். முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடும் உடைந்து விடும்.
தமிழகத்தில் ஏராளமான கேரள மக்கள் வசிக்கின்றனர். அதுபோல கேரளாவில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இரண்டு மாநிலங்களிலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அந்த நிலைமை ஏற்படக் கூடாது என்று தான் நாங்கள் நினைக்கிறோம். முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் தமிழகத்திலிருந்து எந்த பொருளும் உள்ளே செல்லாது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஓர வஞ்சனை செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார் வைகோ.