கோவில்பட்டியில் வேப்பம் பழ விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் வேப்பம் பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் நடக்கும் பகுதிகளில் வேப்பமரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. விவசாயிகள் விளைநிலங்களில் வேப்பமரம் வளர்ப்பதால் அதன் வேர்கள் நிலத்தில் உள்ள பூச்சிகளை அழிப்பதுடன் மரங்களில் இருந்து விழும் வேப்பம் பழங்கள் நல்ல உரமாகவும் பயன்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்னர் கோவில்பட்டி விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் வேப்பம் பழங்கள் அமோகமாக விளைந்துள்ளது. இதனால் வேப்பமரத்தில் இருந்து வேப்பம் பழங்கள் கீழே விழத் துவங்கியுள்ளன.
இப்பழங்களை சேகரிக்கும் ஏழை எளிய விவசாயிகள் நாள் ஒன்றுக்கு கிலோ ரூ. 7 முதல் 10 வரை வருவாய் ஈட்டுகின்றனர். வேப்பம் முத்துகள் கிலோ ஒன்றுக்கு ரூ.13 வரை சில்லரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வேப்பங் கடுக்கா ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 800 வரை கிடைக்கிறது.
கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் வேப்பம் முத்துகள் தேனி, விருதுநகர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications