தலைமைச் செயலாளராக மாலதி நியமனம்-பொறுப்பேற்றுக் கொண்டார்

இதன்மூலம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர். அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது
தலைமைச் செயலாளர் பதவியை வகித்து வந்த கே.எஸ்.ஸ்ரீபதி, கடந்த ஏப்ரல் மாதமே ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் நடந்து வந்ததால் அவருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. நேற்று அவரது பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக மாலதி நியமிக்கப்பட்டார்.
மாலதி தமிழக கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக இருந்து வந்தார். தமிழகத்தின் 2வது பெண் தலைமைச் செயலாளர் மாலதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பு லட்சுமி பிரானேஷ் கடந்த 2.12.2002 முதல் 30.4.2005 வரை தலைமைச் செயலாளராக செயல்பட்டார்.
தமிழக அரசின் 39வது தலைமைச் செயலாளர் மாலதி. பதவி நியமனம் வழங்கப்பட்டதும் உடனடியாக நேற்று மாலை ஐந்தர மணிக்கு தனது புதிய பொறுப்பை மாலதி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கே.எஸ்.ஸ்ரீபதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பிர்மிங்காமில் படித்தவர்:
மாலதிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். 1954ல் பிறந்த மாலதி 1977ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் தனது பணியைத் தொடங்கினார்.
எம்.எஸ்.சி விலங்கியல் படித்தவர். இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நிதி மேலாண்மை டிப்ளமோ முடித்தவர். இவரது தந்தை சுவாமிநாதன் கர்நாடகத்தில், தொலைத் தொடர்புத்துறையில் உயர் பதவியில் இருந்தவர். அங்கு வசித்ததால், தமிழ், ஆங்கிலம் தவிர கன்னடமும் நன்றாகத் தெரியும். அதேபோல இந்தியிலும் புலமை பெற்றவர்.
1978-ம் ஆண்டில் திருச்சி மாவட்ட உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய அவர் உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மி்கவும் அமைதியானவர், எளிமையானவர், நேர்மையானவர், கண்டிப்பானவர் என பேசப்படுபவர் மாலதி. கோப்புகளை தங்க விடாமல் உடனுக்குடன் பார்த்து அனுப்பி வைத்து விடுவார். தான் பார்க்கும் வேலைக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மிக, மிக அதிகம் என்று கூறுவார். இதே கருத்தை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் அவ்வப்போது எடுத்துக் கூறி எந்த வகையிலும் உங்கள் பணியில், லஞ்சம் தன் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கூறுவார்.
மாலதிக்கு ஒரே மகள் தன்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக ஓய்வு பெறுவதையொட்டி ஸ்ரீபதி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விருந்தளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
இப்பதவி காலத்தில் பல பசுமையான நினைவுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பை நான் ஏற்கப்போகும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது பற்றி உறுதியாகத் தெரிந்ததும் உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் சரியாக 2 ஆண்டுகள் இப்பதவியில் இருந்திருக்கிறேன். இப்பதவியை வகித்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்பதவி காலத்தில் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அது சிறந்த அனுபவமாகவும், சாதனையாகவும் அமைந்தது. அந்த விழாவினை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது என்றார்.
மாலதி பேசுகையில், தலைமைச் செயலாளர் பொறுப்பில் கே.எஸ்.ஸ்ரீபதி சிறப்பாக பணியாற்றினார். அவரது சிறப்பான பணியை தொடர முயற்சி செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications