ஆந்திரா மாநில துணை முதல்வராகிறார் கீதா ரெட்டி?

இப்போது ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் கீதா.
ராஜசேகர ரெட்டியின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர்
கடந்த 20 ஆண்டுகளாக ஆந்திரா காங்கிரசில் இவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.
ஆந்திரா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே பல காங்கிரஸ் அமைச்சரவைகளில் இவர் துணை முதல்வராகலாம் என்று பேச்சு அடிபட்டதுண்டு. ஆனால், அந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவி்ல்லை.
இந் நிலையில் இப்போது ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் முதல்வர் ரோசைய்யாவுக்கும் ஜெகன்மோகன் ரெட்டி பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறார். முதல்வர் பதவியை குறி வைத்து ரோசய்யாவு்கு எதிராக அவர் நடத்தி வரும் மறைமுக அரசியலால் காங்கிரஸ் தலைமை வெறுத்துப் போய் உள்ளது.
ஆந்திராவில் மிகுந்த பலம் மிக்க ரெட்டி சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற ஜெகன்மோகனை முதல்வர் ரோசய்யாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து இன்னொரு ரெட்டி பிரமுகரை வைத்தே ஜெகன்மோகனுக்கு கடிவாளம் போட காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அந்த வகையில் கீதா ரெட்டியை துணை முதல்வராக்கி, ஜெகன்மோகனுக்கு ஆதரவாக உள்ள ராஜசேகர ரெட்டி ஆதரவு எம்எல்ஏக்களை இழுத்து அவரை பலவீனப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்க கீதா ரெட்டியை டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லி விரைந்துள்ளார்.
ஆனால், இது குறித்து கீதா ரெட்டி கூறுகையில், சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பதற்கான முன்மொழிதல் மனுவில் கையெழுத்து போடவே டெல்லி சென்றுள்ளேன். எனது பயணத்தில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பதவி-போட்டியில் வயலார் ரவி:
இதற்கிடையே காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கேரள முதல்வர் பதவிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு இப்போதே இன்னொரு போட்டி உருவாகிவிட்டது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய ரவி, மத்திய அமைச்சராக இருந்தாலும், நான் கேரள அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இனி மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன்.
காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications