கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அதிகாரிகள் மூவரை விடுவித்தது சரியே-உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றவாளிகளாக கூறப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி குடந்தையில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீவிபத்து ஏற்பபட்டது. இதில் 94 இளம் குழந்தைகள் தீக்கிரையாகினர்.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்களான பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, அவரது மனைவி சரஸ்வதி, தலைமையாசிரியர் சாந்தலெட்சுமி, சமையலர் விஜயலட்சுமி, வசந்தி, தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி மற்றும் முன்னாள் தாசில்தார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஏழாண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிச்சாமி, கும்பகோணம் தாசில்தார் பரமசிவம், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோரை குற்றவாளிகள் அல்ல என்று கூறியதோடு, அவர்கள் மூன்று பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது தஞ்சாவூர் கோர்ட்.
இது குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கும்பகோணத்தைச் சேர்ந்த இன்பராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு கும்பகோணம் டி.எஸ்.பி. இளங்கோவன் தாக்கல் செய்த பதில் மனுவில்,
தீ விபத்து வழக்கினை விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் அதிகாரிகள் மூவரையும் வழக்கிலிருந்து நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகே மூவரையும் வழக்கிலிருந்து நீக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் உத்தரவிட்டார். அதில், அதிகாரிகள் மூவரையும் விடுவித்தது சரியே. மூவரையும் வழக்கில் சேர்க்க போதிய காரணம் இல்லை. இருப்பினும், இந்த வழக்கில் பொதுநலன் கருதி மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications