சட்ட மாணவர்கள் மீதான தாக்குதல்-7 போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அசோக் குமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஜிபி லத்திகா சரண் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த மாதம் 17-ம் தேதி தனியார் பேருந்து நடத்துனர் வாசுதேவன் மற்றும் சிலர், ஒரு தகராறு தொடர்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசினர் சட்டக்கல்லூரி மாணவர் அசோக் குமாரை திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அசோக் குமாரை கைது செய்து காவல் நிலைய பிணையில் அனுப்பினர். ஆனால், அசோக்குமார் அன்று மாலையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் தன்னை தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்குச் சேர்ந்தார்.
அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில் வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டு தீவிரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்நிலையில், அசோக்குமாரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, திருக்கழுக்குன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, தலைமைக் காவலர்கள் குப்புசாமி, ராஜேந்திரன், முதல் நிலை காவலர்கள் செÜந்தரராஜன், பார்த்திபன், நடராஜன் ஆகியோர் புதன்கிழமை தேதி தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளும் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications