விமானப்படையின் கெளரவ கேப்டனாக சச்சின் நியமனம்
சமீப காலமாக திரையுலகப் பிரபலங்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ராணுவத்தில் கெளரவ கேப்டன், லெப்டினென்ட், கர்னல் ஆகிய அந்தஸ்துகள் தருவது அதிகரித்து வருகிறது. கடந்த காலத்தில் கபில் தேவ், நடிகர் மோகன்லால் ஆகியோருக்கு அப்படிப்பட்ட அந்தஸ்து தரப்பட்டது.
இந்த நிலையில் விமானப்படையின் கெளரவ கேப்டன் என்ற அந்தஸ்து சச்சினுக்குத் தரப்பட்டுள்ளது. விமானப்படையின் கெளரவ கேப்டன் அந்தஸ்தைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.
இதற்கான விழா டெல்லியில் உள்ள விமானப்படை ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய விமானப் படையின் தலைமை தளபதி பி.வி.நாயக் கலந்து கொண்டு டெண்டுல்கருக்கு கவுரவ குரூப் கேப்டன் அந்தஸ்தை அளித்தார்.
37 வயதான டெண்டுல்கர் பத்மவிபூசன், பத்மஸ்ரீ, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, விஸ்டன் கிரிக்கெட் விருது, அர்ஜுனா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்து வைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது விமானப்படையின் கெளரவ கேப்டன் பொறுப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
மேலும் விமானப்படையின் பிராண்ட் அம்பாசடராகவும் சச்சின் செயல்படுவாராம். விரைவில் போர் விமானத்திலும் அவர் பறக்கவிருப்பதாக தெரிகிறது.
நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில், விமானப்படை எனக்கு அளித்த இந்த கவுரவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப்படையில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது.
இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கனவு காணுங்கள். கனவு ஒருநாள் மெய்ப்படும்.' என்றார்.