சம்பளம் இல்லாமல் லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை
சென்னை: லிபியாவில் கட்டுமான வேலைக்காக சென்று முறையாக சம்பளம் தரப்படாமல் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள். இவர்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு கட்டடப் பணிக்காக 2009 டிசம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள் உள்பட 86 பேர் சென்றுள்ளனர்.
நல்ல வேலை, அதிக ஊதியம் கிடைக்கும் என்று கூறியதன் அடிப்படையில் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த இரண்டு ஏஜென்சிகள் மூலம் அவர்கள் லிபியா சென்றனர்.
ஆனால் அவர்களுக்கு சொன்னபடி சம்பளம் தரவில்லை. சரியான சாப்பாடும் கிடைக்கவில்லை. அதேசமயம் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். சொல் பேச்சு கேட்காதவர்களை சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களில் 6 பேருக்கு, அவர்களது குடும்பத்தினர் விமான டிக்கெட்டை அனுப்பி வைத்து தமிழகத்திற்கு வரவழைத்து மீட்டுள்ளனர். ஆனால் மற்ற 80 பேரும் லிபியாவிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்கள் ஷபா என்ற ஊரில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனராம். இவர்களில் 10 பேரின் குடும்பத்தினர் சென்னையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சரவை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசு தலையிட்டு 80 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications