சென்னையில் விடுதலை சிறுத்தை பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை கொடுங்கையூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கிருஷ்டா என்ற கிருஷ்ணன் என்ன கலைஅழகன் (32) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி-பொருளாதார விழிப்புணர்ச்சி இயக்கத்தின் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு சங்கீதா, மாலா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
எருக்கஞ்சேரி சூல்புனல் கரையில் உள்ள மாலாவின் வீட்டில் நேற்றிரவு கிருஷ்டா இருந்தார். நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த 8 பேர் கதவைத் தட்டினர்.
வெளியே வந்த கிருஷ்டாவை அந்தக் கும்பல் விரட்டிச் சென்றனர். ஒரு சிறிய சந்துக்குள் வைத்து மனைவி, மகன் கண் எதிரிலேயே கிருஷ்டாவை அந்தக் கும்பல் வெட்டியது. இதில் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்ட கிருஷ்டா அங்கேயே பலியானார்.
கிருஷ்டாவின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. இதையடுத்து கொலையாளிகள் தப்பியோடிவிட்டனர்.
கிருஷ்டா அந்தப் பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வியாசர்பாடியை சேர்ந்த தொழிலதிபர் பாட்ஷா தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கதிலும், எம்.கே.பி. நகரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் மற்றும் வியாசர்பாடி பெண் சாமியார் நாகபூஷணம் ஆகியோர் கொலை வழக்கிலும் கிருஷ்டா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன.
இதனால் முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. கொலையையடுத்து அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications