நக்சலைட்களால் கடத்தப்பட்ட 3 போலீஸாரும் விடுவிக்கப்பட்டனரா? தெரியாது என்கிறார் நிதீஷ்குமார்
பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட் நக்சலைட்களால் கடத்திச் செல்லப்பட்ட 3 போலீஸாரும் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
லக்கிசராய் பகுதியிலிருந்து ஆகஸ்ட் 29ம்தேதி மூன்று போலீஸாரும் மாவோயிஸ்ட் நக்சலைட்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரை நக்சலைட்கள் கொன்றதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் மூன்று பேரும் பத்திரமாக இருப்பதாக நேற்று நக்சலைட்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
மேலும், இன்று மூன்று பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இன்று மூன்று பேரும் விடுவிக்கப்பட்டதாக நக்சலைட்கள் தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் யாரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், அதுகுறித்து எனக்கு இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
கிஷன்ஜி என்பவர் (மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கிஷன்ஜியா என்பது தெரியவில்லை) இன்று அதிகாலையில், கடத்தப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டரான அபய் பிரசாத் யாதவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து, யாதவ் விரைவில் வீடு திரும்புவார் என உறுதியளித்து விட்டுச் சென்றதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி ஒளிபரப்பியுள்ளது.
அந்த சந்திப்பின்போது கிஷன்ஜியிடம் யாதவின் மனைவி ரஜினி பேசும்போது கிஷன்ஜி கையில் ராக்கி கயிறை கட்டினாராம். இதனால் மனம் நெகிழ்ந்த கிஷன்ஜி, நக்சலைட்களுக்கும் தாயார், சகோதரிகள் உண்டு. இனியும் உங்களைத் துயரத்தில் வைத்திருக்க விரும்பவில்லை. உங்களது குமுறலும், நெகிழ்ச்சியும் எங்களை இளக்கி விட்டது. விரைவில் உங்களது கணவர் வீடு திரும்புவார் என்று கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இதனால் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் விடுவிக்கப்பட்ட 3 பேரும் இதுவரை வந்தது போலத் தெரியவில்லை. இதனால் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து ஐஜி திவிவேதி கூறுகையில், நாங்களும் அந்த டிவி செய்தியைப் பார்த்தோம். ஆனால் வந்த நபர் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கிஷன்ஜியா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
யாதவ் தவிர சப் இன்ஸ்பெக்டர் ரூபேஷ் குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லோகஸ் டெடே, பீகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் இதேஷாம் கான் ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களில் டெடே கொல்லப்பட்டு விட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மூன்று பேருடன் சேர்த்து டெடே கடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.