பாண்டிக் கால்வாயை காணோம்-வடிவேலு பாணியில் உயர்நீதிமன்றக் கிளையில் நூதன வழக்கு
நெல்லை: கிணத்தைக் காணோம் என்று நடிகர் வடிவேலு படத்தில் வரும் காமெடிக் காட்சியைப் போல, கால்வாயைக் காணோம், கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்துத்தர வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அத்தனை பேரையும் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார்.
அதே பாணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் காணாமல் போன கால்வாயை கண்டுபிடித்துத் தரக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நூதன வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாண்டிக் கணவாய் என்ற பெயரில் கால்வாய் ஒன்று இருந்தது. இக்கால்வாய்க்கு கடந்த 1994-ம் ஆண்டு நான் நிலம் கொடுத்தேன். பாண்டிக் கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. திடீரென இந்தக் கால்வாயை காணவில்லை. எனவே, இதனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தேன். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பில் வக்கீ்ல் மாதவகோவிந்தன் ஆஜாராகி வாதாடினார். அவர் கூறும்போது கால்வாயைக் காணவில்லை என்று வழக்கு தொடர்ந்த பின்னர் தான் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் தரப்பட்டது. அதில் ஒரே ஒரு நபர் மட்டும்தான் கால்வாயை ஆக்கிரமித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
மேலும் வரத்து கால்வாயை காண்பித்து இதுதான் பாண்டிக் கால்வாய் என்று கூறுகின்றனர். வரத்து கால்வாய் எங்கே என்றால் அதுதான் இது என்று கூறுகிறார்கள். காரகாட்டக்காரன் படத்தின் வாழைப்பழம் கதை போன்று உள்ளது. எனவே பாண்டிக் கால்வாயைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைச்சாமி, முருகேசன் ஆகியோர் பாண்டிக் கால்வாயை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் மற்றும் எட்டயபுரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.