காமன்வெல்த் போட்டிக்குத் தேர்வாகிய தமிழக நீச்சல் வீரர் தாக்கப்பட்டார்
ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (24). இவர் நீச்சல் வீரர். சமீபத்தில் நடந்த தெற்காசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
அடுத்த மாதம் தலைநகர் டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தின் சார்பில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதற்காக இவர் தீவிரமாக பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி செய்வதற்காகச் சென்றார். அங்கு அவரை அடையாளம் தெரியாத 2 பேர் கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்கினர். இதில் கை, கால், தலை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
அந்த மரம நபர்கள் தப்பி விட்டனர். காயம் ஆடைந்த பால கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் பல தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்த பெடரேசன் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும், இவர் 2 தேசிய சாதனைகளையும் படைத்துள்ளார்.
இத்தனை சாதனைகள் படைத்த இவர் அடுத்த மாதம் டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியிலும், நவம்பர் மாதம் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்ள் சேர்வாகியுள்ளார். இவர் படைத்துள்ள சாதனைகளை கௌரவித்து முதல்வர் கருணாநிதி நாளை காலை 11 மணிக்கு விருது வழங்குவதாக இருந்தது.
அவரை தாக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என்று யாரேனும் இப்படி செய்துள்ளார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதலில் பாலகிருஷ்ணன் தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. உடல் முழுவதும் காயங்கள் உள்ளன.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்னை தாக்கியவர்களை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து என்னைத் தாக்கினர் என்று அவர் கூறினார்.