வேண்டுமென்றே யாரோ கடிதம் எழுதியுள்ளனர்-ஜெ.வுக்கு மிரட்டல் குறித்து கமிஷனர் கருத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதத்தை, பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரோ வேண்டும் என்றே எழுதியிருப்பதாக தெரிகிறது என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கடிதங்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிரட்டல் கடிதம் எழுதிய நபரை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், சர்ச்சையை கிளப்புவதற்காக யாரோ வேண்டுமென்றே இதுபோன்ற கடிதங்களை எழுதுவதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு இசட் பிளஸ் மற்றும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 6 மெய்காப்பாளர்கள் (1 ஆய்வாளர், 1 காவலர் - ஒரு சமயத்தில் இருவர்), அவருடைய இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு (2 தலைமை காவலர்கள், 12 காவலர்கள்), வெடிபொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு 3 உதவி ஆய்வாளர்கள், 3 காவலர்கள் மற்றும் 3 பெண் காவலர்கள், அதிவிரைவு படையைச் சேர்ந்த 8 காவலர்கள், இரண்டு வழிக்காவல் பாதுகாப்பு 6 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், சுற்றுப்புற பாதுகாப்பில் 3 உதவி ஆய்வாளர்கள், 6 காவலர்கள், மற்றும் பகலில் இரண்டு கண்காணிப்பாளர்களும் இரவில் ஒரு கண்காணிப்பாளரும் பாதுகாப்பு அலுவல் புரிகின்றனர்.
ஆக மொத்தம் 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 3 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 58 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பின்படி வழிக்காவலின் போது முன்னும் பின்னும் 6 என்.எஸ்.ஜி. காவலர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவருக்கு இதேபோன்ற காவல் பாதுகாப்பு போயஸ் கார்டன், சிறுதாவூர் மற்றும் கொடநாடு ஆகிய தங்கும் இடங்களிலும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கென்று தனி பாதுகாப்பும், பொதுக்கூட்டங்களுக்கு தனி பாதுகாப்புமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.