கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து பாலியல் கல்யாணத்தை நிறுத்திய சிறுமி!
கிருஷ்ணகிரி: தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பால்ய விவாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஃபேக்ஸ் மூலம் தெரிவித்து கல்யாணத்தை நிறுத்தி தப்பியுள்ளார் 15 வயது கிருஷ்ணகிரி சிறுமி.
அந்த சிறுமியின் பெயர் முனியம்மாள். பள்ளிக்கூடம் போய்வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயித்து, பத்திரிக்கை அடித்து ஏற்பாடுகளில் இறங்கினர். அவருக்கு நிசத்சயித்த மாப்பிள்ளை சுந்தரத்திற்கு வயது 32. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் முனியம்மாள். படிப்பின் மீது நாட்ட்டமாக இருந்த அவருக்கு இந்த கல்யாண சமாச்சாரங்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்தன.
எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்த அவர் புத்திசாலித்தனமாக தனது கல்யாணப் பத்தரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராய்க்கு ஃபேக்ஸ் செய்தார்.
இதைப் பார்த்த ஆட்சித் தலைவர் ஒரு அதிகாரிகள் குழுவை கல்யாண வீட்டுக்கு அனுப்பினார். அவர்கள் விரைந்து சென்று பால்ய விவாகம் நடத்துவது சட்டவிரோதம் என்று கூறினர். பின்னர் கல்யாண மாப்பிள்ளை சுந்தரத்தை அழைத்து இந்த கல்யாணம் நடந்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதையடுத்து கல்யாணம் செய்யவில்லை என்று கூறி சுந்தரம் உள்ளிட்ட மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பினர்.
பின்னர் முனியம்மாளின் பெற்றோர் வெங்கட்ரமணன், கோனம்மாளை அழைத்து அவர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
அதிகாரிகளின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
முனியம்மாளின் புத்திசாலித்தனமான செயலை ஆளுநர் அருண் ராய் வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பால்ய விவாகத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் வெற்றிகரமாக அமைந்துள்ளதையே இது காட்டுகிறது என்றார்.