அழகிரியின் வெற்றியை எதிர்த்து சிபிஎம் வழக்கு நடத்தலாம்: உயர் நீதிமன்றம்
சென்னை: மதுரை தொகுதியி்ல் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக சார்பில் மு.க. அழகிரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.மோகனும் போட்டியிட்டனர். இதில் அழகிரி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து மோகன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவர் கடந்த 30.10.09ம் தேதி காலமானார். இதனால், அந்த வழக்கு அத்தோடு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் அழகிரிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த, மோகனுக்கு பதிலாக தன்னை அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் அந்தக் கட்சியின் மாற்று வேட்பாளருமான ஏ.லாசர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த வழக்கில் ஆஜரான அழகிரியின் வழக்கறிஞர், மோகனின் டெபாசிட் தொகையை வைத்து, லாசர் வழக்கு தொடர முடியாது. மதுரை தொகுதியில் மாற்று வேட்பாளராக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாலும், பின்னர் அதனை வாபஸ் பெற்றுவிட்டார். எனவே, தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து அவர் விலகிவிட்டார்.
இந் நிலையில் இந்த தேர்தலை எதிர்த்தும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரியும் லாசர் வழக்கு தொடர முடியாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனபாலன் தனது தீர்ப்பில்,
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 112(3)ன்படி தேர்தல் வழக்கு தொடர்ந்த ஒருவர் இறந்துவிட்டால், 14 நாட்களுக்குள் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யலாம். லாசர் 14 நாட்களுக்குள் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்துவிட்டார்.
இவ்வாறு அனுமதி கோருபவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். அதுபோல, தேர்தல் வழக்கை ஒரேயொருவர் மட்டும் தொடர்ந்திருந்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டால், குறிப்பிட்ட தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை தொடரலாம் என்று உச்ச நீதிமனறம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் லாசர் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும், மோகனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அனுமதி கோரியுள்ளார்.
தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் அது வாதி, பிரதிவாதி ஆகியோருக்கு இடையிலானது என்று அர்த்தம் ஆகாது. அந்தத் தொகுதி முழுவதுமே அந்த வழக்குக்கு தொடர்புடையதாககிறது.
எனவே, லாசர் ரூ.2,000 டெபாசிட் செலுத்தி, தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications