கேரளாவில் சிறுநீரகம் திருடப்பட்டதாக வாலிபர் புகார்-இரண்டும் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்!
கோவை: கேரளாவில் வேலைக்குப் போன இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரிடம் சிறுநீரகம் திருடப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது இரு சிறுநீரகங்களும் இருப்பதாக தெரிய வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு நேற்று காலை ஒரு வாலிபர் கண்ணீருடன் வந்தார். நெல்லை மாவட்டம் தென்காசிக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டார். அந்த வாலிபர் கண்ணீருடன் நிற்பதை பார்த்து, ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் தனது பெயர் சுடலை என்றும், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்ததாகவும், தன்னை சிலர் காரில் கடத்திச்சென்று, மயக்க மருந்து செலுத்தி தனது சிறுநீரகத்தை திருடிவிட்டதாகவும் கூறினார். அந்த வாலிபரின் அடிவயிற்றில் காய தழும்பு இருந்தது.
அதைத்தொடர்ந்து, அந்த வாலிபரை ஆட்டோ டிரைவர்கள் கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை சந்தித்து அந்த வாலிபர் புகார் மனு கொடுத்தார்.
அதில்,
தென்காசி அருகே உள்ள தேசியம்பட்டியைச் சேர்ந்த நான், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். எனது ஊரைச்சேர்ந்த காளிராஜ், சிவா ஆகியோரும் அங்கு வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர் எங்களை காரில் அழைத்துச் சென்றார். காரில் சில வாலிபர்கள் இருந்தனர்.
அவர்கள் எங்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வாங்கி கொடுத்தனர். சாப்பிட்டு முடித்ததும், திடீரென்று ஸ்பிரே மூலம் மயக்க மருந்தை முகத்தில் தெளித்தனர். மயங்கி விழுந்த பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒரு ரயில் தண்டவாள பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தோம்.
எங்களை அங்குள்ள தமிழர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கோவைக்கு லாரியில் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சுடலையை அரசு மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்கேன் செய்து பார்த்தபோது சுடலைக்கு இரு சிறுநீரகங்களும் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து டாக்டர் சிவப்பிரகாசம் கூறுகையில், சம்பந்தப்பட்ட நகருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு இரு சிறுநீரகங்களும் இருப்பது தெரிய வந்தது. அவை திருட்டுப் போகவில்லை. அதேசமயம், அவரது அடி வயிற்றில் காயத் தழும்பு காணப்படுகிறது. அது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அதுகுறித்து சுடலையிடம் கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications