இப்படியொரு சாதனையை சென்னை மாநகராட்சி பார்த்ததில்லை-ஸ்டாலின்
சென்னை: இப்படியொரு வரலாற்று சாதனையை சென்னை மாநகராட்சி பார்த்ததில்லை, இனி பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்டவர்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது.
டி.விக்களையும், திருமண உதவி தொகையையும் வழங்கி ஸ்டாலின் பேசுகையில், 2006ம் ஆண்டு முதல்வசராக கருணாநிதி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக விழா மேடையிலேயே 1 கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் இப்போது 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்குகிறார்.
அதைப்போலத்தான் 2006ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தி இதுவரை 5 கட்டங்களில் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு 29.8.2010 வரை 1 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 14 லட்சத்து 16 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக தமிழக மக்களுக்கு வழங்கப்படும்
சென்னை மாநகரில் கடந்த 4 ஆண்டுகளில் 99 பள்ளி கட்டடங்கள், 5 மேம்பாலங்கள், வாகன சுரங்கப்பாதை, 16 குடும்பநல மையங்கள், 20 ஆயிரத்து 862 புதிய தெரு மின்விளக்குகள், 1346 தானியங்கி மின் விளக்குகள், 37 உயர்கோபுர மின் விளக்குகள், மெரினா கடற்கரை அழகுப்படுத்துதல், 200 புதிய சத்துணவு கூடங்கள், 51 உடற்பயிற்சி கூடங்கள், மயானங்களை மேம்படுத்துதல் என மொத்தம் 2006ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி மூலம் சுமார் 12,000 வளர்ச்சிப் பணிகள் ரூ.1,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு வரலாற்று சாதனையை சென்னை மாநகராட்சி பார்த்ததில்லை, இனி பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
திமுக அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை செய்து முடித்ததுடன், மக்களிடம் சொல்லாத பல்வேறு முக்கிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டமாகும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வரும் திமுக ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் தர வேண்டும். ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல மக்கள் இந்த ஆட்சிக்கு தொடர்ந்து நல்ஆதரவை வழங்கிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications