விபச்சார வழக்கு-18 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட டிஎஸ்பி
ஊட்டி: விபச்சார வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1987-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த எத்திராஜ் என்பவர் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்தார். அப்போது 6.4.87 அன்று குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்த சசிகலா, விஜயா ஆகிய 2 பெண்களை காணவில்லை என்று அவர்களது தந்தை சாந்தா குரூஸ் புகார் செய்தார்.
இதை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த மேரிகுட்டி என்ற பி.டி.தங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. மேரிகுட்டி பெண்களை விபசாரத்திற்கு அனுப்பி வைக்கும் புரோக்கர்.
சசிகலா, விஜயா ஆகிய இருவரையும் எத்திராஜ்தான், சென்னையில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்திற்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து மேரிகுட்டி, எத்திராஜ் ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, மாவட்ட கோர்ட் குற்றப்பிரிவு எத்திராஜ் மற்றும் மேரிகுட்டி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. சென்னை உயர்நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தன.
இதெல்லாம் நடந்து முடிய 18 ஆண்டுகளாகி விட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து எத்திராஜ், மேரிகுட்டி ஆகிய 2 பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதன்படி எத்திராஜை சென்னையில் கைது செய்து, நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டு கூடுதல் நீதிபதி நாராயணசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
கூடுதல் நீதிபதி நாராயணசாமி அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையின்படி கோவை மத்திய சிறைச்சாலையில் எத்திராஜை அடைக்க உத்தரவிட்டார். மேரிக்குட்டி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications