திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு கோரிய காங். எம்.எல்.ஏவால் பரபரப்பு
திருச்சியில் நேற்று புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய தொட்டியம் தொகுதி காங். எம்.எல்.ஏ., ராஜசேகரன்,
என் தொகுதியில் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொட்டியம், தா.பேட்டை வழியாக கலைஞர் கால்வாய் எனும் புதிய திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். அதற்கடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை தொகுதிகளில் முத்தரையர் சமூக மக்கள் அதிகமுள்ளனர். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, முத்தரையர் சமூகத்தினரை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பதை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும்.
இந்தமுறை சட்டசபைத் தேர்தலிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய வேண்டும் என்றார் ராஜசேகரன்.
தனது சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தேவை என்று முதல்வர் முன்னிலையில் அரசு விழாவின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்த கோரிக்கையால் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் முகம் சுளித்தனர்.