விநாயகர் சதுர்த்தி: மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை மறுப்பு- பாஜக கண்டனம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந் நிலையில் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல துறைகளில் விநாயக சதுர்த்தி நாளான 11.09.2010 அன்று விடுமுறை மறுக்கப்படுவதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
இந்துக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 11ம் தேதி அன்று அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழக்கம் போல் ஆண்டுதோறும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுமென தமிழக பாஜக கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்-இலங்கை எம்.பி பங்கேற்பு:
இதற்கிடையே சென்னையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இலங்கை எம்.பி. நந்திக்கொடி யோகேஸ்வரன் பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் வரும் 18,19 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கின்றனது. சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு மீன்பிடி துரைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
19ம் தேதி இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) சார்பில் திருவல்லிக்கேனி பெரிய வீதியில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. இதில் இலங்கை தமிழ் எம்.பி. யோகேஸ்வரன் கலந்து கொள்கிறார்.
இது குறித்து அர்ஜூன் சம்பத் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச வேண்டும், அதற்காக அங்கு விரைவில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று விநாயகரை வழிபட்டு சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளோம்.
19ம் தேதி நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இலங்கை மட்டக்களப்பு எம்.பி. நந்திக்கொடி யோகேஸ்வரன் பங்கேற்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications