ஜெ.வுக்கு மிரட்டல்-குஷ்பு பேச்சு: கோட்டை முன்பு போராடிய அதிமுக பெண் பிரமுகர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்புவைக் கண்டித்தும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்த தொடங்கிய அதிமுக பெண் பிரமுகரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவர், நேற்று பகல் 11.30 மணியளவில் சென்னை கோட்டை கொத்தளம் முன்பாக மெயின் ரோட்டில் திடீரென்று கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்தார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு காவல் பணியில் இருந்த உதவி கமிஷனர் காதர்மொய்தீன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு சென்று புவனேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் புவனேஸ்வரி கோட்டை போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
அவர் சில துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தார். அதில்,ஜெயலலிதாவுக்கு அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளது. மீண்டும் இப்போது ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இவ்வாறு மிரட்டல் கடிதங்கள் அனுப்பும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு போலீஸ் படை ஒன்றை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்கவேண்டும்.
அ.தி.மு.க. தொண்டர்களாகிய நாங்கள் அனைவரும் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம். கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று மாலை புவனேஸ்வரியை போலீஸார் விடுவித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications