கருணாநிதி தற்போது பேசுவதெல்லாம் தேர்தலுக்காகவா? டி.ராஜா கேள்வி
திருச்சி: முதல்வர் கருணாநிதி தற்போது பேசுவதெல்லாம் தேர்தலுக்காகவா என்பதை அவர்தான் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா.
திருச்சியில், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக்கூட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் ராஜா பேசியதாவது:
குடியிருக்க வீடு கேட்டு, செப்.,13ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள குறைபாட்டை களைந்து, செம்மைப்படுத்தச் சொல்கிறோம். புதுச்சேரியில் வீடு கட்ட இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. வெறும் 75 ஆயிரம் ரூபாயில் எப்படி வீடு கட்டமுடியும்? சமத்துவப்புரத்தில் அரசு வீடு கட்டிக் கொடுக்கும் அளவு பணத்தையாவது வழங்க வேண்டும்.
கான்கீரிட் வீடு, மக்கள் வசிக்கும் அளவுக்கு வசதியான வீடாக இருக்கவேண்டும். பறவை வசிக்கும் கூடு போல இருக்கக்கூடாது. பட்டா நிலத்தில் குடிசையில் வசிப்பவருக்கே வீடு என்கின்றனர். அரசு மற்றும் புறம்போக்கு நிலத்தில் பட்டா இல்லாமல் வசிப்பவர்கள் அனாதைகளா?
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றவேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. தேர்தலுக்காக முதல்வர் கருணாநிதி பேசுகிறாரா? என்பதை நீங்கள் தான் அவரிடம் கேட்கவேண்டும். வீணாகும் உணவுத் தானியத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்து தேவையற்றது, ஏற்புடையது அல்ல.
எங்களது கட்சி தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறது. தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பெரியார், அண்ணா ஆகியோரை சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்று முதல்வர் கருணாநிதி சொன்னது தவறானது. நாங்கள் எப்போதும் கொள்கை மாறியது இல்லை. பகுத்தறிவு கொள்கையை கொண்ட தி.மு.க., கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தனர். நாங்கள் பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டு வைக்கவில்லை. உழைக்கும் மக்களுக்கு, ஏழைக்காக தொடர்ந்து போராடுவது, மதவாத சக்திகளை தொடர்ந்து எதிர்ப்பது என்ற கொள்கையை கைவிடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications