சிறை தண்டனைக்கு பயந்து விஷம் குடிப்பு: தாய் சாவு, மகன் கலைக்கிடம்
சங்கரன்கோவில்: சுரண்டை அருகே சிறை தண்டனைக்கு பயந்து தாய்,மகன் விஷம் குடித்தனர். இதி்ல் தாய் இறந்தார். மகன் கவலைகிடமாக உள்ளார்.
சுரண்டை அருகேயுள்ள சேர்ந்தமரம் பெரியமுத்து தெருவை சேர்ந்த மாடசாமி மகன் அருணாசலம். 1995ல் இவருக்கும், கண்மணி என்ற மகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த விசாரணையில் மகேஸ்வரியின் சாவுக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று தெரிய வந்தது. பின்னர் அருணாசலம், பூஇசக்கி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மகேஸ்வரி தற்கொலை செய்த வழக்கு நெல்லை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் அருணாசலத்திற்கும், தாய் களஞ்சியத்துக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அங்கு நடந்த வழக்கில் அருணாசலத்திற்கும், களஞ்சியத்திற்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறை தண்டனைக்கு பயந்து நேற்றிரவு அருணாசலமும், களஞ்சியமும் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தனர். இதில் களஞ்சியம் இறந்தார். அருணாசலம் கவலைக்கிடமான நிலையில் சுரண்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.