கொடநாடு பஞ்சாயத்து தலைவரின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ஜெயலலிதா மனு
நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா முறையான அனுமதியின்றி தேயிலை தொழிற்சாலை கட்டுவதாக புகார் வந்ததையடுத்து அதுகுறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனை தமிழக அரசு நியமித்தது.
அவரது உத்தரவின் பேரில் கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மற்றும் அதிகாரிகள் எஸ்டேட்டிற்குள் ஆய்வு செய்யச் சென்றனர். ஆனால் அவர்களை எஸ்டேட் நிர்வாகிகளும் அதிமுகவினரும் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
இந் நிலையில் கொடநாடு எஸ்டேட் மானேஜர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் எஸ்டேட்டுக்குள் ஆய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, எஸ்டேட்டிற்குள் தேயிலை தொழிற்சாலை கட்ட உரிய அனுமதி பெறப்பட்டிருப்பதால் அங்கு ஆய்வு நடத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வே எண்- 171ல் உள்ள பகுதியில் அனுமதியை மீறி தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவதாகவும், அதை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதற்கு ஜெயலலிதாவின் சார்பில் வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், 171 என்ற இல்லாத சர்வே எண்ணை குறிப்பிட்டு அதில் அனுமதி மீறி கட்டிடம் கட்டுவதாக கொடநாடு பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தர்மாராவ், நீதிபதி சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.
எஸ்டேட் நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்:
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொது பாதையை கிராம மக்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கொடநாடு எஸ்டேட் நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.