காஷ்மீரில் நடக்கும் கலவரத்துக்கு என்ன நிறம்?: நரேந்திர மோடி
டெல்லி: காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்துக்கு என்ன நிறம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,
காவி பயங்கரவாதம், காவி பயங்கரவாதம் என்று அமைச்சர் சிதம்பரம் அடிக்கடி பேசி வருகிறார். அப்படியானால் இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வரும் பயங்கரவாதத்துக்கு அவர் என்ன பெயர் சூட்டியுள்ளார்?.
அமைச்சர் சிதம்பரத்தின் கூற்றின்படி இப்போது பயங்கரவாதத்துக்கும் பல்வேறு நிறங்கள் வந்துவிட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரம், வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த மாநிலத்தில் நடக்கும் கலவரம், வன்முறை போன்ற பயங்கரவாதத்துக்கு என்ன நிறம் என்பதை மத்திய அமைச்சர் சிதம்பரம் சொல்வாரா?.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து பண்டிட் இன மக்கள், அங்கு எதிர்கொண்டு வரும் வன்முறை, கலவரங்களுக்கு என்ன நிறம் என்பதை சிதம்பரம் சொல்ல வேண்டும் என்றார் மோடி.
பிகார் தேர்தல் பிரசாரம்-மோடி குறித்து பாஜக தடுமாற்றம்:
இந் நிலையில் பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியை பங்கேற்கச் செய்வதா, வேண்டாமா என்பதில் பாஜகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
பிரச்சாரத்துக்கு மோடி வரக் கூடாது என்று பிகார் முதல்வரும் பாஜக கூட்டணியின் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஆனால், டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, கட்சியின் மூத்த தலைவர்கள் பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், நரேந்திர மோடியும் பிரசாரக் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்றும் கூறினார்.
இதற்கு ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவிடமிருந்து கடும் கண்டனம் வந்தததையடுத்து, சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் மிக அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நக்வி, பிரசாரக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நரேந்திர மோடி குறித்தும் இன்னும் முடிவெடுக்கவில்லை.
கட்சித் தலைமை மற்றும் மாநிலத் தலைமையிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அதே போல வருண் காந்தியும் பிகார் பக்கம் வரக் கூடாது என்று நிதிஷ் மற்றும் ஷரத் யாதவ் ஆகியோர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், அவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் விஷயத்திலும் பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது.
பிகாரில் வரும் அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications