மதுரையில் நிதி நிறுவன அதிபர், ஊழியர் அடுத்தடுத்து கொலை
மதுரை: மதுரையில் ஒரே நாளில் நிதி நிறுவன அதிபரும், அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இருவர் பிடிபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்முருகன்(55). மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையம் அருகே காம்பளக்ஸ் ஒன்றில் அடகுக் கடை மற்றும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை பிற்பகல் தனது கடையில் பொன்முருகன் இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக குத்தி விட்டுத் தப்பி ஓடியது. இதில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது அவனியாபுரத்தைச் சேர்ந்தவரான சரவணன் என்பவர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர்தான் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து அவருக்குச் சொந்தமான கேரம்போர்டு தயாரிக்கும் பட்டறைக்கு போலீசார் சென்றனர். அங்கும் சரவணன் இல்லை. இதையயடுத்து பட்டறையை போலீஸார் ரெய்டு செய்தனர். அப்போது கழிப்பறையில் ஒருவர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர். கை, கால்களைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் மாணிக்கம் என்பது தெரிய வந்தது. இவர் பொன்முருகனிடம் வேலை பார்த்து வந்த ஊழியர் ஆவார்.
அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர். சரவணனைப் பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரிடம் விசாரித்ததில், சரவணன் மட்டுமல்லாமல் அவரது தம்பி பாலாஜிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் வில்லாபுரத்தைச் சேர்ந்த தங்கமாயன், மாசானம் ஆகியோரும் இந்தக் கொலைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து வில்லாபுரம் விரைந்த போலீஸார் தங்கமாயனைப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,
அடகுக்கடை நடத்தி வந்த பொன்முருகன் கடைக்கு வாடிக்கையாளரான சரவணன் வந்திருக்கிறார். வேறு இடத்தில் உள்ள அவரது நகைகளை மீட்டு கொண்டுவந்து, பொன்முருகன் கடையில் அடகு வைக்க, ரூ.இரண்டரை லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த தொகையை தந்தால் கமிஷன் தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து பொன்முருகன் அந்த பணத்தை வேறு ஒருவரிடம் பேசி ஏற்பாடு செய்து, தன் ஊழியர் மாணிக்கத்தை அவருடன் அனுப்பியுள்ளார். சரவணனும், அவருடைய கூட்டாளிகளும் பணத்தைப் பறித்துக் கொண்டு மாணிக்கத்தைக் கொலை செய்து விட்டு பொன்முருகனிடம் வந்துள்ளனர்.
மாணிக்கம் பணத்துடன் ஓடி விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அதை பொன்முருகன் நம்பவில்லை. பணத்துக்காக நாடகமாடுகிறீர்கள், மாணிக்கம் நல்லவன் என்று கூறியுள்ளார். போலீஸில் புகார் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பொன்முருகனையும் கொன்றுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சரவணன் சி்க்கினான்:
இந் நிலையில் சரவணனை திருச்சியில் வைத்து போலீசார் இன்று மடக்கினர்.
அவனுடன் தலைமறைவான பாலாஜி, மாசானம் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.