பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி: ஜெயலலிதா எதிர்ப்பு
சென்னை: உள்நாட்டு ஜவுளித் தொழில் நலிவடையும் அளவுக்கு பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருக்கும் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவுளித் தொழிலில் முன்னணி மாநிலமாக விளங்கியது தமிழ்நாடு. கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
மேலும் கடுமையான மின்வெட்டு காரணமாக ஜவுளித் தொழில் நொடிந்து போயுள்ள சூழ்நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
நூலின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதன் காரணமாக, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை உட்பட ஒட்டுமொத்த ஜவுளித்துறையே முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது.
கடந்த ஆண்டு ரூ. 28,000 ஆக இருந்த ஒரு கேண்டி பஞ்சு விலை தற்போது ரூ. 41,000 ஆகவும், ரூ. 130 ஆக இருந்த ஒரு கிலோ நூல் விலை தற்போது ரூ. 195 ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் கடுமையான மின்வெட்டும், பஞ்சு ஏற்றுமதியும்தான் என்று ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே பஞ்சை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருத்தி விளைச்சல் அக்டோபர் மாதத்தில் தான் துவங்குகிறது. ஆண்டின் துவக்கத்திலேயே ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கினால், விலையை செயற்கையாக உயர்த்தி லாபம் பார்க்கவே நிறுவனங்கள் முயற்சிக்கும் என்றும், போட்டி அதிகரிக்கும் என்றும், இதன் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும், நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் இந்தத் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உள்நாட்டு ஜவுளித் தொழில் நலிவடையும் அளவுக்கு பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்து இருக்கும் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications