திமுகவுக்கு எதிராக ஆவேச அலை-இனி வெல்லவே முடியாது:-வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாளையொட்டி இன்று காஞ்சிபுரத்தில் மதிமுக திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ம.தி.மு.க.வின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டினை அவர் பிறந்த செப்டம்பர் 15ந் தேதி காஞ்சீபுரத்தில் நடத்துகிறோம். இந்த மாநாடு மகத்தான வெற்றிபெறும்.
அண்ணா பிறந்தநாள் விழாவை ம.தி.மு.க. வரலாற்று கடமையாக கொண்டாடுகிறது. கடந்த 1998ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை அழைத்து மெரினா கடற்கரையில் பல லட்சம் பேர் திரண்ட மறுமலர்ச்சி பேரணியை ம.தி.மு.க. நடத்திக்காட்டியது. அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவை மதுரையிலும், நிறைவு விழாவை திருச்சியிலும் நடத்தினோம். 102 வது பிறந்த நாள் விழாவை அவர் கண் மலர்ந்த காஞ்சியில் நடத்துகிறோம்.
அண்ணாதான் எங்களுக்கு தலைவர். அவர் தான் எங்கள் வழிகாட்டி. இந்த மாநாட்டில் கூட அண்ணாவைத்தான் முன்னிலைப்படுத்துகிறோம்.
மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை ம.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. அரசை எதிர்த்து ஒரு ஆவேச அலை வீசுகிறது. தேர்தலில் இனி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும். இதற்கு எடுத்துக்காட்டுதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்திய கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் லட்சோபலட்சம் மக்கள் பங்கேற்றது.
எங்களது மாநாட்டுக்கு அதிமுக சார்பில் பிரதிநிதிகளாக ஜெயக்குமாரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைக்கிறார் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications