தமிழக ஆட்சியை மாற்ற மக்களுக்கு வாய்ப்பு தருகிறோம்-பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: இன்றைய அரசியலில் தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. ஆட்சி மாற்றத்தை காண மக்கள் துடிக்கிறார்கள். மக்களுக்கு அத்தகைய வாய்ப்பை அளிக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள், தே.மு.தி.க. 6-வது ஆண்டு தொடக்கம் ஆகியவற்றைகொண்டாடும் வகையில் வரும் 18-ந் தேதிமாலை 6.30 மணியளவில், சென்னை திரு.வி.க.நகர் டிக்கர்ஸ் சாலையில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் வி.யுவராஜ் தலைமை தாங்குகிறார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்து, 6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றைய அரசியலில் தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. ஆட்சி மாற்றத்தை காண மக்கள் துடிக்கிறார்கள். மக்களுக்கு அத்தகைய வாய்ப்பை அளிக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.
இந்த முப்பெரும் விழாவில் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.