பிளஸ்டூ மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம்-பள்ளியைப் பூட்டி மக்ள் போராட்டம்
வந்தவாசி: பிளஸ்டூ படித்து வந்த மாணவியுடன், அவரது அறிவியல் ஆசிரியர் ஓடிப் போனார். பின்னர் ஜோடியாக காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (28) என்பவர் 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதே பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த கொண்டயான்குப்பத்தைச் சேர்ந்த மலர் என்ற மாணவியுடன், செந்திலுக்கு காதல் மலர்ந்தது. பள்ளிப் படிப்பை முடித்த மலர், தனது காதலை செந்திலுடன் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருவரும் ஊரை விட்டு ஓடினர். பின்னர் சென்னை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தைப் பதிவு செய்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து மலரின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் மலரும், செந்திலும், தெள்ளார் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் நல்லூர், கொண்டையான்குப்பம் கிராம மக்கள் கொதிப்படைந்தனர். நல்லூர் விரைந்த அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். காலாண்டுத் தேர்வு எழுத வந்த மாணவர்களும் தேர்வைப் புறக்கணித்து விட்டு பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். பின்னர் பள்ளியைப் பூட்டுப் போட்டு பொதுமக்கள் பூட்டி விட்டனர்.
தகவல் கிடைத்ததும் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால் நல்லூர் கிராமத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications