கிரிக்கெட்டில் ஊழலை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது-சரத் பவார்
டெல்லி: கிரிக்கெட்டில் ஊழலை எந்த ரூபத்திலும் ஏற்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
தன்னை வந்து சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் பவார்.
இதுகுறித்து பவார் கூறுகையில், இதுபோன்ற நான்சென்ஸை எல்லாம் ஏற்கவே முடியாது. ஸ்பாட் பிக்ஸிங் புகாருக்குள்ளான வீரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவர். கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்றுவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.
பாகிஸ்தான் வீரர்கள் மீதான ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை விரைவில் முடியும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
ஸ்காட்லாந்து விசாரணை முடிவடையும் வரை இதில் கருத்து கூற முடியாது. முடிவு தெரியும் போது நடவடிக்கை கடுமையாகவே இருக்கும்.
புகாரின் அடிப்படையில் சிலரை சஸ்பெண்ட் செய்துவைத்துள்ளோம். அந்த வீரர்கள் பாகிஸ்தான் திரும்பிச் செல்ல ஸ்காட்லாந்து யார்டு அனுமதித்துள்ளது. விசாரணைக்குத் தேவைப்படும்போது அவர்களை அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் பெயரை இழுப்பது அவசியமற்றது. இந்தியாவுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் எந்தவிதமான சதியும் இதில் இல்லை. அதை நான் நம்பவில்லை என்றார்.
பவார், பட் சந்திப்பின்போது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளைப் புதுப்பிப்பது குறித்தும் பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications