பிகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது: நிதீஷ் குமார் திட்டவட்டம்
பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக அழைக்கக் கூடாது என்று அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி நீடிக்கிறது.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்களான மோடியையும் வருண் காந்தியையும் அழைக்கக் கூடாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவும், முதல்வர் நிதிஷ் குமாரும் கூறி வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் மோடிக்கு நிதிஷ்-சரத் யாதவ் ஆகியோர் தடை போட்டனர். அதை அப்போது பாஜக ஏற்றுக் கொண்டுவிட்டது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய நிதிஷ் குமார், எங்களைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தலில் முடிவு செய்ததைப் போல், மோடியை பிரசாரத்துக்கு அழைக்க வேண்டாம் என்ற பழைய நிலையே தொடர விரும்புகிறேன்.
தேர்தல் பிரசாரத்துக்கு மோடியை அழைக்க வேண்டாம் என்ற எங்கள் கோரிக்கையை பாஜக ஏற்கும் என்று நம்புகிறேன்.
இதையும் மீறி அழைப்போம் என்று சொன்னால் இந்த விஷயத்தை பாஜகவின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சிவானந்த திவாரி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, எங்கள் கட்சி ஜனநாயக மாண்புகளைக் கடைப்பிடிக்கும் கட்சி. எனவே ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு.
பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதாதளத்துக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் வரும் 27ம் தேதிக்குள் தீர்க்கப்படும். முந்தைய தேர்தல்களைப் போலவே ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும் தனித் தனியாகவே தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் என்றார்.
இந் நிலையில் மோடியை பிரச்சாரத்துக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் குறித்து விவாதிக்க பாஜக தேசிய செயற்குழு ஒரிரு நாட்களில் கூடவுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர்-பாஜகவில் மோதல்-சின்கா ராஜினாமா:
இந் நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி கிடைக்காததால் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து மூத்த பாஜக தலைவரான யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அர்ஜுன் முண்டா முதல்வராக தேர்வானார்.
இந்தப் பதவிக்கு குறி வைத்திருந்த யஷ்வந்த் சின்கா இதனால் அதிருப்தி அடைந்து பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் பதவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications