விநாயகர் சிலை பாதுகாப்பு பணியிலிருந்த எஸ்.ஐயை வெட்டிய இருவர் கைது
சென்னை: விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றும் நசீர் அகமத் (55) தண்டையார்பேட்டை இருசப்பன் முதல் தெருவில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியி்ல் ஈடுபட்டிருந்தார்.
இரவு 11.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை அரிவாள்களால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.
இதில் தலை, கை, முகம், மணிக்கட்டு என உடலில் 7 இடங்களில் வெட்டு விழுந்து கவலைக்கிடமாகக் கிடந்த அகமத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளர். இது குறித்து வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் சேஷசாயி நிருபர்களிடம் கூறுகையி்ல்,
தண்டையார் பேட்டையில் விநாயகர் சிலைக்கு பாதுகாப்புக்கு சென்ற நசீர் அகமது என்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டார். இது தொடர்பாக சுரேஷ், தண்டபாணி ஆகிய இருவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.
இவர்கள் பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் குடிபோதையில் மற்றவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை சப்-இன்ஸ்பெக்டர் நசீர் அகமது தட்டிக் கேட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ளும் போது துப்பாக்கியை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் அதிகாரிகள் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்தால் போலீசார் சட்டத்துக்குட்பட்டு துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரவுடிகளை பிடிப்பதற்காக காவல் துறையினர் காலை,மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியும், வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறையிலிருந்து வெளியில் வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு சிறையிலிருந்து வரும் குற்றவாளிகள் மீண்டும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவார்களேயானால் அவர்களை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.