அயோத்தி தீர்ப்பு எதிரொலி-போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு-கொடி அணிவகுப்பு
அயோத்தி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கும் நாள் நெருங்கி வருவதைத் தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
செப்டம்பர் 24ம் தேதி 60 ஆண்டு கால அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதையடுத்து உ.பி. முழுவதும் பரபரப்பாகியுள்ளது. நாடு முழுவதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு விடாமல் தடுக்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அயோத்தியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் இன்று பாதுகாப்புப் படையினரின் கொடிஅணிவகுப்பு நடத்தப்பட்டது. அதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மத்திய போலீஸ் படை, துணை ராணுவப் படையினர், மாநிலப் போலீஸார், ஆயுதப் படை போலீஸார், அதிரடிப் படையினர் என பல வகை பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர்ப் புகை குண்டுகள், துப்பாக்கிகள், வாட்டர் கேனான்கள் என சகல ஆயுதங்களுடனும் பாதுகாப்புப் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பைசாபாத் மாவட்ட எஸ்.பி.ரத்தோர் கூறுகையில், சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். அயோத்தி மற்றும் பைசாபாத்தில் அமைதி நிலவவும், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி உள்ள இடம் முழுமையாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கூடுதல் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
10 கம்பெனி மத்தியப் படையினர், 11 கம்பெனி ஆயுதப் படையினர், 5000 ஊர்க்காவல் படையினர், 40 கம்பெனி மாநில ஆயுதப் படையினர், 1000 போலீஸார் அயோத்தி மற்றும் பைசாபாத் மாவட்டத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications