அமெரிக்காவில் நிருபமா ராவ்-ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஒபாமாவின் பயணத் திட்டம், கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள், சந்திக்க வேண்டிய தலைவர்கள், விவாதிக்க வேண்டிய முக்கிய சர்வதே-பொருளாதார- அணு ஒப்பந்த விஷயங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி ராபர்ட் பிளேக் உள்பட அமெரிக்க மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக நிருபமா ராவ், ராபர்ட் பிளேகை தனியாகவும் சந்தித்துப் பேசினார். இருவரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தீவிரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினர்.