சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள்: தீவிர பாதுகாப்பு-பலூன் மூலம் கண்காணிப்பு
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கின்றன. இதையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 11ம் தேதி சென்னையில் சுமார் 1,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சிலைகளுக்கு போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த சிலைகளை கடலில் கரைக்கக் கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இன்றும், நாளையும் நடக்கின்றன. இன்று மாலை சிவசேனா சார்பில் ஊர்வலம் நடக்கிறது.
தங்க சாலை அரசு அச்சகம் அருகில் இருந்து கிளம்பும் இந்த ஊர்வலம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சென்றடையும்.
அதே போல புளியந்தோப்பு ஜெயின் பவன் அருகில் இருந்தும் இன்னொரு ஊர்வலம் புறப்பட்டு காசி மேடு துறைமுகத்தை சென்றடையும்.
மூன்றாவது ஊர்வலம் வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு நீலாங்கரை கடற்கரையை சென்றடையும்.
நாளை சூளை வியாபாரிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதரன் பிரிவு), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) ஆகியவை சார்பில் ஊர்வலங்கள் நடக்கின்றன.
சூளை, கே.கே.நகர், திருவல்லிக்கோணி, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலங்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையை சென்றடையும்.
அதே போல நாளை பகல் 1.30 மணி முதல் 5 மணி வரை இந்து முன்னணி சார்பிலும் ஊர்வலம் நடக்கிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை, ஹாரீஸ் ரோடு, முத்துசாமி பாலம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ஊர்வலங்கள் புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையை சென்றடையும்.
காவல் துறை வரையறைகளை மீறி ஊர்வலமாகச் செல்ல முயன்றாலோ, அனுமதிக்கப்பட்ட பாதைகள், தேதி மற்றும் நேரங்களை மீறி நடந்தாலோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்த விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கும் பாதைகளில் பாதுகாப்புக்கு சுமார் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், முதல் முறையாக சென்னையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தப்பட்டு விநாயகர் ஊர்வலம் கண்காணிக்கப்படவுள்ளது.
மெரீனாவில் இந்த பலூன் பறக்கும். 300 மீட்டர் தூரத்துக்கு இந்த கேமரா மூலம் கண்காணிக்க முடியும். இந்த பலூன்-கேமராவுக்காக ரூ. 1.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், கொட்டிவாக்கம் பல்கலை நகர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.