ஜெ.வுக்கு நான் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதவில்லை-திமுக பிரமுகர் மறுப்பு
மதுரைக்கு வரக் கூடாது. அண்ணனை பகைத்துக் கொள்ளக்கூடாது. மீறி வந்தால் குண்டு வைத்து கொடூரமாக கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டி இதுவரை நான்கு முறை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
கடைசியாக வந்த 2 மிரட்டல் கடிதங்களை வைகைப் புயல் பாலு, முத்துப்பாண்டியன் ஆகியோர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டியன் என்பவர் மதுரை மாநகராட்சியின் 48வது வட்ட திமுக செயலாளராக இருக்கிறார்.
தனது பெயர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அடிபடுவதால் சட்டம் ஒழுங்கு துணைக் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
அதில், மதுரை அதிமுக பிரமுகரும், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளருமான பசும்பொன் பாண்டியனுக்கும் எனக்கும் முன் விரோதம் இருக்கிறது. திமுகவில் இருந்த நாங்கள் இருவரும் நன்றாக பழகி வந்தோம்.
இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த போது என்னையும் அழைத்தார். நான் வரமுடியாது என்று கூறிவிட்டேன். கடைசி வரை திமுகவில்தான் இருப்பேன் என்று கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த பசும்பொன் பாண்டியன், உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். உனக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று சவால் விட்டார்.
அவர்தான் இப்போது என் பெயரை தவறாகப் பயன்படுத்தி நான் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக பழிவாங்குகிறார். எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியிருக்க முடியும்?
இந்த விவகாரத்தால் என் மனசு ரொம்ப வேதனைப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.