ஜெ.வுக்கு தொடர் கொலை மிரட்டல் கடிதங்கள்-சிபிஐ விசாரிக்க அதிமுக கோரிக்கை
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் கொலை மிரட்டல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.
இதுதொடர்பாக இன்று பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பார்த்து மனு கொடுத்துள்ளனர் அதிமுக எம்.பிக்கள்.
கடந்த சில வாரங்களில் இதுவரை மொத்தம் நான்கு கொலை மிரட்டல் கடிதங்கள் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் வைகைப் புயல் பாலு மற்றும் முத்துப்பாண்டியன் என இருவரது பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில் முத்துப்பாண்டியன் மதுரை மாநகராட்சி திமுக வட்டச் செயலாளராக இருக்கிறார்.
ஆனால் தான் இந்தக் கடிதங்களை அனுப்பவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் மனு கொடுத்தனர்.
அதில், ஜெயலலிதாவுக்கு இசட்- பிளஸ் பிரிவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. சமீபத்தில் 3-வது தடவையாக கொலை மிரட்டல் வந்துள்ளது.
ஜெயலலிதா மதுரை பொதுக்கூட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில் இது போன்ற மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பின்னணியில் சிலர் செயல்படுகிறார்கள்.
மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications