நாகர்கோவிலில் இன்று திமுக முப்பெரும் விழா
நாகர்கோவில்: திமுக சார்பில் நாகர்கோவிலில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா, தி.மு.க. தோன்றிய நாள் விழா ஆகிய முப்பெரும் விழா ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான தி.மு.க.வின் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நாகர்கோவில் நகராட்சி பொருட்காட்சி திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவில் கருணாநிதி கலந்துகொண்டு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிதி மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.
பின்னர் இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், அண்ணா விருதை செ.குப்புசாமிக்கும், பாரதிதாசன் விருதை ராஜம் ஜானுக்கும், கலைஞர் விருதை ஜி.எம்.ஷாவுக்கும் வழங்கி கருணாநிதி பேசுகிறார்.
விழாவுக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் சுரேஷ்ராஜன் வரவேற்று பேசுகிறார். பொருளாளர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நடிகை குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவே விமானம் திருவனந்தபுரம் சென்றார் முதல்வர் கருணாநிதி. அவருடன் கனிமொழி, குஷ்பு உள்ளிட்டோரும் சென்றனர். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருணாநிதி கன்னியாகுமரி கிளம்பிச் சென்றார். மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கருணாநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி வந்து சேர்ந்த முதல்வர் அங்குள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தார்.
இன்று மாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் நாகர்கோவில் நகராட்சி பொருட்காட்சி மைதானத்தை வந்தடைகிறார். முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் மாலை 5.30 மணிக்கு அவர் உரையாற்றுகிறார்.
கருணாநிதி வருகையைத் தொடர்ந்து நாகர்கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.